சனி, 31 டிசம்பர், 2011

கவிதை

என் முதல் கவிதைகள்
ஒரு குயர் ரூல்டு நோட்டில்
எழுதித் தீர்க்கப்பட்டபின்
முதல் காதலிக்கு சமர்ப்பணம்
செய்து அவளிடமே நீட்டிவிட்டேன்

என் இரண்டாம்கட்ட கவிதைகள்
ஒரு குயர் அன்ரூல்டு நோட்டில்
எழுதித் தீர்க்கப்பட்டபின் 
இரண்டாம் காதலிக்கு சமர்ப்பணம் 
செய்து அவளிடமே நீட்டி விட்டேன்,

பிறகு நான் 
கவிதை எழுதுவதையும் 
விட்டொழிந்து விட்டேன்.

மனைவி வந்த பிறகு
தக்கோளி 1 கிலோ,புளி,
உளுந்தம்பருப்பு,துவரை அரைகிலோ
அஸ்கா ஒரு பாக்கெட் என‌
வெற்றுத்தாள்களில் எனக்கு
கவிதையாய் எழுதி நீட்டுகிறாள்.
வாழ்க்கை கவிதையாய் நகருகிறது.

"உங்கள் காதலிகள் மீது ஏதேனும்
வருத்தங்களுண்டா? என்று
அன்றொரு நாள் கேட்டாள்.
வருத்தம் அவர்கள் மீதல்ல எனக்கு
அந்த ஒரு குயர்
நோட்டுகளின் மீதுதான் என்றேன்.

எனக்கு எப்போது எழுதுவீர்கள்? என்றாள்.
வயிறு உனக்கு புடைக்கிறதே
தெரியவில்லையா? அதுதான் 
உனக்கான என் கவிதை,என்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக