சனி, 31 டிசம்பர், 2011

மெல்போர்ன் டெஸ்டில் அவுஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோற்றது குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன.
பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணியை, மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி அடிபணிய வைத்து ஆச்சரியமளித்துவிட்டது என்றும் கூறியுள்ளன.
"தி டெய்லி டெலிகிராப்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "பலம் வாய்ந்த வரிசையைக் வரிசையைக் கொண்ட இந்திய அணியின் துடுப்பாட்டம் இப்போது பலவீனமாகியுள்ளது என்பதை தோனியே ஒப்புக்கொண்டுள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் தாங்கள் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சச்சின் இன்னும் 100-வது சதமடிக்கவில்லை. 100-வது சதத்தை மீண்டும் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம் அவருக்கு உள்ளது. பிராட்மேன் விளையாடியபோது அவர் ஆட்டமிழந்தால் அதுதான் பத்திரிகை போஸ்டர்களில் முக்கிய இடம்பிடித்தது. "ஹி இஸ் அவுட்' என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் சச்சின் ஆட்டமிழந்தபோது "இட்ஸ் ஓவர்' என துணைத் தலைப்பிலேயே பத்திரிகைகள் முடித்துவிட்டன.
சச்சின் 100-வது சதத்தை நிறைவு செய்யாவிட்டாலும், அவர் மைதானத்தை விட்டு வெளியேறியபோது பாராட்டுக்கு குறைவில்லை ' என்று கூறியுள்ளது. "மெதுவான ஆடுகளமான இந்திய ஆடுகளங்களில் மட்டுமே இந்திய அணியால் எளிதாக ரன் குவிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது' என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
"சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே அர்த்தமுள்ள ஆட்டத்தை ஆடினார். அவருக்கு 38 வயது என்றாலும், இளம் வீரரைப் போன்று அற்புதமாக விளையாடினார். மற்ற வீரர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. சச்சின் மட்டும் களத்தில் இருந்திருந்தால் 100-வது சதம் மட்டுமல்ல, வெற்றியும் சாத்தியமாகியிருக்கலாம்' என்று "சிட்னி மார்னிங் ஹெரால்டு' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெற்றிபெற்றுள்ள அவுஸ்திரேலிய அணியை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏராளமான ஊடகங்கள் வெகுவாகப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றன.

1 கருத்து: